கடலூர் அருகே மலர்ந்து வரும் மாங்குரோவ் காடு

கடலூர், ஜன. 7: கடலூர் அருகே உள்ள கிராமங்களில் மாங்குரோவ் காடுகள் மலர தொடங்கி உள்ளன.  சுரபுன்னைக் காடுகள் என்றும் மாங்குரோவ் காடுகள் என்றும் அழைக்கப்படும் பிச்சாவரம் சதுப்பு நில வனப்பகுதி உலகப் பிரசித்
கடலூர் அருகே மலர்ந்து வரும் மாங்குரோவ் காடு
Updated on
1 min read

கடலூர், ஜன. 7: கடலூர் அருகே உள்ள கிராமங்களில் மாங்குரோவ் காடுகள் மலர தொடங்கி உள்ளன.

 சுரபுன்னைக் காடுகள் என்றும் மாங்குரோவ் காடுகள் என்றும் அழைக்கப்படும் பிச்சாவரம் சதுப்பு நில வனப்பகுதி உலகப் பிரசித்தி பெற்றது. வங்கக் கடலோரப் பகுதிகளில், மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில்தான் எழில் கொஞ்சும் மாங்குரோவ் காடுகள் உள்ளன.

 பிச்சாவரம் வனப் பகுதிகளில் இந்த மாங்குரோவ் காட்டு மரங்கள் பெருமளவுக்கு இருப்பதால், 2004 சுனாமிப் பேரலைத் தாக்குதலில் இப் பகுதிகள் பாதிக்கப்படவில்லை. ஆடுகள் மேய்ச்சல் காரணமாகவும், விறகு வெட்டுவோர், இறால் பண்ணை அமைப்போர், மீனவர்கள் படகுகளை நிறுத்தும் இடங்களை மாற்றிக் கொள்வதாலும் பிச்சாவரம் வனப்பகுதி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மரங்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.

 வனத்துறையினர் புதிய செடிகளை நட்டு வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டு வந்தபோதிலும், அதனால் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை. கடலூரில் கெடிலம் ஆறு கடலில் கலக்கும் உப்பங்கழிப் பகுதியில், மாங்குரோவ் காட்டு மரக் கன்றுகளை, சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினர் நட்டனர். மரங்கள் நன்கு வளர்ந்தும், வனத்துறையினர் முறையாக பராமரிக்காததால், மரங்கள் பல பட்டுப் போய்விட்டதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

 ஆலமரத்தின் பணி

 இந்நிலையில் கடலூரை அடுத்த நொச்சிக்காடு, நடுத்திட்டு, தியாகவல்லி, திருச்சோபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள உப்பனாற்றுப் பகுதிகளில், மாங்குரோவ் காட்டு மரங்களான சுரபுன்னை, அவிசீனியா கன்றுகளை நட்டு பராமரிக்கும் முயற்சியில், ஆலமரம் என்ற தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

 இதுவரை மேற்கண்ட கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்றுகள் நடப்பட்டு இருப்பதாக, அந்த அமைப்பின் செயலாளர் இளையராஜா புதன்கிழமை தெரிவித்தார். 3 மாதங்களுக்கு முன் நடப்பட்ட சுரபுன்னை, அவிசீனியா கன்றுகள் தற்போது நன்றாகத் துளிர்த்து வளர்ந்து இருப்பாகவும் அவர் கூறினார்.

 சுனாமியின் போது நொச்சிக்காடு, நடுத்திட்டு, தியாகவல்லி உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்ட மனித உயிரிழப்பே இத்தகைய மரம் நடும் பணிக்குத் தங்களைத் தூண்டியதாகவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com