குடிநீர், கழிவறை வசதி இல்லாத அரசுப் பள்ளி

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  கரியாப்பட்டினம் அரசு மேல
குடிநீர், கழிவறை வசதி இல்லாத அரசுப் பள்ளி
Updated on
1 min read

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி 1969-ல் தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு சுற்றளவில் வேறு மேல்நிலைப் பள்ளிகள் இல்லை.

 அதனால், பிராந்தியங்கரை, மூலக்கரை, வடமழை மணக்காடு, அவுரிக்காடு, செட்டிப்புலம் உள்ளிட்ட சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

 தற்போது இந்தப் பள்ளியில் 391 மாணவிகள் உள்பட 1,003 பேர் படித்து வருகின்றனர். இவர்களில் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அதிகம்.

 இப்பள்ளிக்கு அரசு அனுமதித்துள்ள ஆசிரியர் பணியிடங்கள் 36. எனினும், இப்போது 26 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, விலங்கியல், தட்டச்சு உள்ளிட்ட 10 பாடப் பிரிவுகளுக்கான ஆசிரியர், தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

 இந்த இடங்கள் பெற்றோர் - ஆசிரியர்கள் கழகத்தின் முயற்சியால் தாற்காலிகமாக நியமிக்கப்பட்ட 7 ஆசிரியர்கள் மூலம் ஈடுசெய்யப்பட்டு வருகிறது.

 இப் பள்ளியில் புதிய கட்டடம் கட்டுவதற்காக மாணவர்கள் பயன்படுத்தி வந்த கழிவறை ஓராண்டுக்கு முன்னர் அகற்றப்பட்டது. ஆனால், இதற்கு மாற்றாக இதுவரை தாற்காலிக கழிவறை வசதி ஏற்படுத்தப்படவில்லை.பள்ளியைச் சுற்றிலும் குடியிருப்புகள் இருப்பதால், திறந்தவெளியையும் பயன்படுத்த முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுபோல, கடந்த செப்டம்பரில் பழுது ஏற்பட்ட குடிநீர் ஏற்றும் மோட்டார் சீரமைக்கப்படாததால், பள்ளியில் குடிநீர் வசதியும் இல்லை.

 புதிய கட்டடம் கட்டும் பணியோடு, கழிவறை கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால், பணிகள் முடிய இன்றும் பல மாதங்கள் ஆகும் என்பதால், மாற்று வசதியை உடனே ஏற்படுத்த வேண்டும் என்பது மாணவ, மாணவிகளின் கோரிக்கையாகும்.கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர்த்தேக்கத் தொட்டி பள்ளி வளாகத்திலேயே இருந்தும், மாணவர்களுக்கு குடிநீர் கிடைக்காமல் உள்ளது.

 மேலும், பள்ளி வளாகத்திலேயே பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகமும் பயன்படுத்தப்படாமல் இருப்பதும், இதை கடந்த ஆண்டு பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், மாணவர்கள் பயன்பாட்டுக்கு இதை அளிக்கக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

 அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நிதி ஆதாரம் இல்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், பெற்றோர் - ஆசிரியர்கள் கழகம் சார்பில் மாணவர்களிடம் பெறப்பட்ட நிதி கடந்த காலத்தில் முறையாகப் பராமரிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.ஆனால், மாணவ, மாணவிகளின் நிலை கருதி குடிநீர், கழிப்பிட வசதிகளை தாற்காலிக அடிப்படையிலாவது ஏற்படுத்த வேண்டும் என்பதே மாணவர்கள், பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com