
சென்னை, ஜன. 5: திராவிடர் கழகம் சார்பில் உலக நாத்திகர் மாநாடு ஜனவரி 7-ம் தேதி முதல் 3 நாள் திருச்சியில் நடைபெறுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
இது குறித்து அவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
உலகிலேயே அறிவியல் அறிவும், தொழில்நுட்ப அறிவும் நிறைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனினும், அறிவியல் பார்வை இங்கு இல்லை.
உதாரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்கலம் ஏவப்பட்டது. அதற்கு முன்னதாக இந்திய விண்வெளி நிறுவனத் தலைவர் காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று பூஜை நடத்தியுள்ளார். பூஜை நடத்தினால்தான் விண்கலம் விண்ணுக்குச் செல்லும் என்பது நம்மிடையே அறிவியல் பார்வை இல்லாததைக் காட்டுகிறது.
இந்தச் சூழலில், இளைஞர்கள் மத்தியில் அறிவியல் பார்வையை அதிகப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக திராவிடர் கழகம் சார்பில் ஜனவரி 7-ம் தேதி முதல் திருச்சியில் 3 நாள் உலக நாத்திகர் மாநாடு நடத்தப்படுகிறது.
எனது தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டை, நார்வே நாட்டைச் சேர்ந்த அனைத்துலக மனிதநேய நன்னெறிக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் லெவி ஃபிராகல் தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் கவிஞர் கனிமொழி, திட்டக் குழுத் துணைத் தலைவர் மு.நாகநாதன், பின்லாந்து நாட்டின் சுயசிந்தனையாளர் சங்கத் தலைவர் பெக்கா எலோ உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் அறிவியல் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, கருத்தரங்கம், விவாத அரங்கம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன என்றார் வீரமணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.