சென்னை, ஜூலை 6: உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சென்னை "பத்திரிகையாளர் மன்றத்தில்' புதன்கிழமை "புதிய தலைமுறை' பத்திரிகையின் ஆசிரியர் மாலன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன் ஆகியோர் கூறியதாவது:
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா அக்டோபர் 22ம் தேதி முதல் 30ம் தேதிவரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை "உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு' சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.
"தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள்' - என்பதே இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருள்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா,கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, பிரிட்டன், மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 20 தமிழறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் மொத்தம் 7 அமர்வுகள். கவிஞர் ஆர்.சேரன், பேராசிரியர்கள் ரெ.கார்த்திகேசு, எம்.ஏ.நுஃமான், தமிழவன் உள்பட பலர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கின்றனர்.
ஆய்வுக் கட்டுரைகள் மலராகவும் பின்னர் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டினருக்குப் பதிவுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாய். இதில் சிங்கப்பூரில் தங்கும் வசதி, உணவு, எழுதுபொருள், மாநாட்டு மலர் என அனைத்தும் அடங்கும் என்று அவர்கள் கூறினர். மேலும் விவரங்களுக்கு: www.singaporetamilwriters.com.