மின்வெட்டு காகித கோன் உற்பத்தி பாதிப்பு

ஈரோடு: மின்வெட்டு, காகித விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் காகித கோன் உற்பத்தி 50 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காகித கோன் விலை ஏப்ரல் 1-ம் தேதி முதல் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.  ஜவுளித்
மின்வெட்டு காகித கோன் உற்பத்தி பாதிப்பு
Updated on
2 min read

ஈரோடு: மின்வெட்டு, காகித விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் காகித கோன் உற்பத்தி 50 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காகித கோன் விலை ஏப்ரல் 1-ம் தேதி முதல் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

 ஜவுளித் தொழிலுக்கு மிகவும் அவசியத் தேவையான நூல் மற்றும் துணிகள், காகித கோன் மற்றும் உருளைகளில்தான் சுற்றி வைக்கப்படுகின்றன.

 காகித கோன், காகித உருளை ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஆலைகள் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் இயங்கி வருகின்றன.

 தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காகித கோன்கள், உருளைகளில் 50 சதவீதம் ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் சுமார் 300 ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் 100 ஆலைகள் ஈரோடு, கோபி, கொடுமுடி, பவானி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளை நம்பி நேரடியாக 15,000 தொழிலாளர்களும், மறைமுகமாக 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். மின்வெட்டு, காகித விலை ஏற்றம் ஆகியவை காரணமாக காகித கோன் உற்பத்தித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 கடந்த ஓராண்டில் மட்டும் காகிதத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு டன் ரூ. 20 ஆயிரமாக இருந்த காகிதத்தின் விலை இப்போது ரூ. 23 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 3 ஆண்டுகளாக தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக 5 மணி நேரமும், கடந்த 2 மாதங்களாக 8 முதல் 10 மணி நேரமும் மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் உற்பத்தி 50 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் காகித கோன் உற்பத்தியாளர்கள்.

 இது குறித்து தொழில் நிறுவன காகித கோன் மற்றும் உருளை உற்பத்தியாளர்கள் சங்கச் செயலர் கே.குப்புசாமி கூறியது:

 தமிழகத்தில் ஓராண்டுக்கு முன்பு தினமும் 15 முதல் 17 லட்சம் கோன்கள் வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. ஈரோடு மாவட்டத்தில் தினமும் 8 லட்சம் கோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இப்போது தமிழகத்தில் தினமும் 8 லட்சம் கோன்களும், ஈரோடு மாவட்டத்தில் 4 லட்சம் கோன்களும் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

 மின்வெட்டு, காகித விலை ஏற்றம் காரணமாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் காகித கோன்கள் விலை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. காகித கோன் உற்பத்தியாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் காகிதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 இது குறித்து கோவை காகித கோன் மற்றும் உருளை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.செüந்தரராஜ் கூறியது:

 தமிழகத்தில் உற்பத்தியாகும் காகித கோன்களில் 75 சதவீதம், இங்குள்ள மாவட்டங்களில் உள்ள ஜவுளி ஆலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 மீதமுள்ளவை ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் காகிதங்களின் விலை அதிகரிப்பு, மின்வெட்டு காரணமாக காகித கோன்களின் விலையில் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com