முடங்கிப் போன சிறப்புப் பொருளாதார மண்டலம்!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம், தொடக்க நிலையோடு முடங்கிப் போனதால் மாவட்ட மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.  தொழில் வளர்ச்சி இல்லாத, வறட்சிப் பகுதி
Updated on
1 min read

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம், தொடக்க நிலையோடு முடங்கிப் போனதால் மாவட்ட மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

 தொழில் வளர்ச்சி இல்லாத, வறட்சிப் பகுதியான பெரம்பலூர் மாவட்டத்தில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என்ற முழக்கத்தோடு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் மத்திய, மாநில அரசுகளால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

 இதற்காக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை வட்டம், எறையூர், லப்பைக்குடிகாடு, பென்னகோணம், திருமாந்துறை, பேரையூர் கிராமங்களுக்கு உள்பட்ட பகுதியில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு அளித்து, 3,100 ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது.

 நிலம் வழங்கும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், சிறப்புப் பொருளாதார மண்டலம் அருகே 3 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம் அமைத்து, அதில் விவசாயிகளுக்கு வீட்டுமனை வழங்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

 இதையடுத்து, விவசாயிகள் மனமுவந்து தங்களது நிலங்களை அளித்தனர். 2007-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜிவிகே கட்டுமான நிறுவனத்திடம் இந்தத் திட்டத்தைத் தொடங்க ஒப்பந்தம் செய்தார். ஆனால், அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. பின்னர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்டால் ரயில்வே இருப்புப் பாதை வரும், கடலூர் துறைமுகத்துடன் போக்குவரத்து தொடர்பு ஏற்படும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பன போன்ற அறிவிப்புகளை நம்பிய பெரம்பலூர் மாவட்ட மக்களும், நிலம் வழங்கிய விவசாயிகளும் தற்போது பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 இதனிடையே, சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என அதிமுக அரசு கடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தது, அதுவும், அறிவிப்பாகவே உள்ளது.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் அ. வேணுகோபால் கூறுகையில், ""தமிழக அரசு அறிவித்தபடி, விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கவோ அல்லது கையகப்படுத்தப்பட்ட நிலத்தை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com