அதிகரித்து வரும் கள்ளநோட்டுப் புழக்கம்

சென்னை, ஜன. 16: கள்ளநோட்டு விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படாததால் அதன் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. சென்னை அருகே பள்ளிக்கரணையில் சில நாள்களுக்கு முன்பு கள்ளநோட
Updated on
1 min read

சென்னை, ஜன. 16: கள்ளநோட்டு விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படாததால் அதன் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னை அருகே பள்ளிக்கரணையில் சில நாள்களுக்கு முன்பு கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

முகவர்கள் மூலமாக சமூக விரோதிகள் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 200 கோடி அளவுக்கு கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2009-ம் ஆண்டு தென் மாநிலங்களில் ரூ. 8 கோடி கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டன. 2010-ல் ரூ. 10 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2011-ல் ரூ. 25 கோடி வரை கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரையில் சென்னையில் அதிக அளவில் கள்ளநோட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மொத்தம் 99 கள்ளநோட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் 89 வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து ரூ. 25 லட்சம் மதிப்புக்கு கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில், பெரும்பாலானவர்கள் கள்ளநோட்டை மக்களிடம் புழக்கத்தில் விட்டவர்களே ஆவார்கள்.

ஆனால் அவர்களிடம் பணத்தை கொடுத்தவர்கள் மீதும், கள்ளநோட்டை கடத்திக் கொண்டு வந்தவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதிகரிக்கும் கள்ளநோட்டு புழக்கம்: முன்பு நகரங்களில் மட்டும் காணப்பட்ட கள்ளநோட்டு புழக்கம், இப்போது சிறு கிராமங்களில் கூட காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சமூக விரோதக் கும்பலும், தீவிரவாத இயக்கங்களும் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டு, நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கத் திட்டமிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உளவுத் துறையைச் சேர்ந்த அதிகாரி கூறினார்.

பொருளாதார பாதிப்பு: பள்ளிக்கரணையில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள், மிகுந்த தொழில்நுட்பத்தோடு தயாரிக்கப்பட்டவை என தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நோட்டுகள் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் அச்சடிக்கப்பட்டு, வங்க தேச எல்லை வழியாகத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருவதை அறிந்தும், இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com