

சென்னை: குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் புழல் ஏரி இப்போது மரண ஏரியாக மாறி வருவது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் சுமார் 18 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்த ஏரி. இதிலிருந்து சென்னை முழுவதுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் தண்ணீருடன் நிறைந்து காணப்படும் புழல் ஏரி, சென்னையின் வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது. இயற்கை வளமும் இங்கு நிறைந்திருப்பதால் மக்களுக்கு பொழுதுபோக்கு பூங்காவாகவும் விளங்கி வருகிறது.
இப்படி பல்வேறு வகைகளில் சென்னை மக்களின் வாழ்வாதாரமாக இருந்துவரும் புழல் ஏரி, அண்மைக்காலமாக மரண ஏரியாகவும் மாறி வருகிறது. இந்த ஏரியில் மூழ்கி இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 26 பேர் புழல் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
குடிநீருக்குப் பயன்படுத்தப்படுவதால், தண்ணீர் அசுத்தமாகாமல் இருப்பதற்காக ஏரியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி குளிக்க முற்படுபவர்களே தண்ணீரில் மூழ்கி இறப்பதாக போலீஸôர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழப்பு ஏன்? இப்படி இறப்பவர்களில் 90 சதவீதத்தினர் இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. விடுமுறை நாள்களில் இனிமையாக பொழுதை கழிக்க வரும் இவர்கள், ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கும்போது தண்ணீர் மூழ்கி இறக்கின்றனர். நீச்சல் தெரியாமல் குளிப்பவர்களே, தண்ணீரில் மூழ்கி இறப்பதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார். காவல் துறை தரும் புள்ளி விவரத்தின்படி ஏரியில் இறந்தவர்களில் 75 சதவீதத்தினர் நீச்சல் தெரியாதவர்கள். 25 சதவீதத்தினர் மது அருந்திவிட்டு குளித்தவர்கள்.
இவர்களை தவிர தற்கொலை செய்துகொள்வதற்காக ஏரியில் குதித்து இறப்பவர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர். ஏரியில் குளிக்கக் கூடாது என்றும், குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் பல இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதை யாரும் கண்டுகொள்வதில்லை என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். இந்த ஒழுங்கீனத்தைக் கட்டுப்படுத்த அங்கு தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் போலீஸôர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
புறக் காவல் நிலையம் அவசியம்: போலீஸôர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக கூறியபோதும், ஏரியில் இறப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில் புழல் ஏரிக்கரை கடந்த ஓராண்டாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக வழிப்பறி, பாலியல் தொழில் ஆகியவை நடைபெறுவதாக அப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அப் பகுதி மக்கள் தேவையற்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சமூக விரோத செயல்களை தடுக்கவும், ஏரியில் ஏற்படும் உயிரிழப்புச் சம்பவங்களை தடுக்கவும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக புழல் ஏரிப் பகுதியில் போலீஸôர் எந்நேரமும் கண்காணிப்பில் ஈடுபடும் வகையில், புறக்காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் அந்த ஏரியில் குளிக்க வருவோரைத் தடுக்க முடியும் என்பதோடு, ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் சமூக விரோதச் செயல்களையும் தடுக்க முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.