
சென்னை, மே 29: மத்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையின் காரணமாக தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த ரோசய்யா, 2009-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் 24-ம் தேதி வரை அந்த மாநில முதல்வராக இருந்தார். அந்த மாநில முதல்வராக கிரண் குமார் ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், 2011 ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழக ஆளுநராக ரோசய்யா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ரோசய்யாவின் உயிருக்கு நக்சல்களால் ஆபத்து நேரலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அவருக்கு அளிக்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பை பலப்படுத்தும்படி சென்னை பெருநகர காவல்துறைக்கு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து ஆளுநர் சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு அதன் பிறகே பயணத் திட்டம் இறுதி செய்ய காவல்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் ஆளுநர் வசிக்கும் ராஜ்பவனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு வழக்கமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களை விட, கூடுதலாக காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் ராஜ்பவன் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கையில் சிறப்புப் பயிற்சி பெற்ற கமோண்டோ வீரர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.