ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மழையை நம்பி 74 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மானவாரி பயிராகவும், 54 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் கண்மாய் பாசனம் செய்தும் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது 20 முதல் 30 நாள்கள் பயிராக வளர்ந்து அடியுரம் இட்டு விவசாயம் செய்துள்ளனர். இதனால் நெற்பயிரில் உர நிர்வாகம் பற்றி தெரிந்து செய்வது அவசியம்.
மேல் உரம் இடுதல்: விதைத்த 20 முதல் 25 நாள் வரை மேல் உரம் இடவேண்டும். தழைசத்து தரக்கூடிய யூரியா உரம் ஏக்கருக்கு 22 கிலோ அளவில் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து இரவு முழுவதும் வைத்து காலையில் எடுத்து சாம்பல் சத்துடன் பொட்டாஷ் உரம் 8 கிலோ வீதம் கலந்து வயலில் ஈரம் இருக்கும்போது இடவேண்டும்.
இவ்வாறு வேப்பம் புண்ணாக்கு கலந்து இடுவதால் பயிருக்கு தழைசத்து சிறுகக் கிடைப்பதுடன் பூச்சி நோய் தாக்குதலைத் தவிர்க்கலாம். இதன்படி விதைத்த 40 முதல் 45 நாள்களில் மேல் உரம் இடவேண்டும்.
நுண்ணூட்ட சத்து இடுதல்: நெல் நுண்ணூட்டச் சத்து ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் தேவையான அளவு மணல் கலந்து வயலில் ஈரம் இருக்கும்போது இடவேண்டும். நுண்ணூட்டச் சத்து உரத்தில் பயிருக்குத் தேவையான துத்தநாகம், இரும்பு, மாங்கனீசம், காப்பர் போரான் மற்றும் மக்னீசியம் ஆகிய நுண்ணூட்டச் சத்துகள் அடங்கி உள்ளதால் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து மகசூல் அதிகரிக்கும்.
சிங்சல்பேட் இடுதல்: ஏக்கருக்கு 10 கிலோ சிங்க்சல்பேட் உரத்தினை போதிய மணலை கலந்து வயலில் ஈரம் இருக்கும்போது இடவேண்டும். சிங்சல்பேட் உரத்தில் துத்தநாகம் மற்றும் கந்தக சத்துள்ள உரம் இடுவதால் பயிர் வளர்ச்சி குன்றி சிம்பு வெடிக்காது இருந்தால் இதை இடுவதால் பலன் கிடைக்கும்.
தேவையான நெல் நுண்ணூட்ட உரம் மற்றும் சிங்க்சல்பேட் உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும் என வேளாண் உதவி இயக்குநர் முகம்மது அப்துல் நசீர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.