
நாகை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள பத்தினிக் கோட்டத்தில் கண்ணகி திருநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பூம்புகார் மேலையூர் பத்தினிக் கோட்டத்தில் கண்ணகிக்கு கோயில் உள்ளது. பத்தினிக் கோட்ட அறநிலையம் சார்பில் இங்கு ஆண்டுதோறும் கண்ணகி வீடுபேறு அடைந்த (ஆடி அனுஷம்) நாளில் கண்ணகி திருநாள் விழா நடத்தப்பட்டு வருகிறது.
42-ஆம் ஆண்டு கண்ணகி திருநாள் புதன்கிழமை நடைபெற்றது. கண்ணகியின் திருவுருவச் சிலைக்கு பன்னீர், பால், திரவியப் பொடிகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கங்கை, காவிரி நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு கண்ணகியைப் போற்றி பாடல்கள் பாடி மலர் வழிபாடு நடைபெற்றது. பெண்கள் பொங்கலிட்டு கண்ணகியை வழிபட்டனர்.
தமிழக மக்களுக்கு குறிப்பாக பூம்புகார் மக்களுக்கு பூம்புகாரின் தொன்மையை அடையாளப்படுத்தும் விதமாக பத்தினி தெய்வச் சுடரை ஏந்திக்கொண்டு மேலையூர் தருமகுளம் பகுதியிலிருந்து பத்தினிக் கோட்டம் வரை கண்ணகி அடிச்சுவட்டில் என்ற பேரணி பிற்பகலில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாலை நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற பொருளில் தி.இராஜகோபாலன் சொற்பொழிவாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.