போஸ்டர் பிரச்னையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது திமுக போலீஸில் புகார்

மதுரையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் குறித்து முதன்முறையாக திமுக தரப்பிலிருந்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போஸ்டர் பிரச்னையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது திமுக போலீஸில் புகார்
Updated on
1 min read

மதுரையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் குறித்து முதன்முறையாக திமுக தரப்பிலிருந்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 திமுகவில் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும், முன்னாள் மத்திய அமைச்சரும், தென்மண்டல திமுக அமைப்புச் செயலராக இருந்தவருமான மு.க.அழகிரிக்கும் தலைமைப் பதவி குறித்த கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

 திமுக தலைமை மு.க.அழகிரியை ஓரங்கட்டுவதாக அழகிரி ஆதரவாளர்கள் ஆதங்கத்துடன் ஒட்டிய போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை விமரிசித்ததும், அதைத் தொடர்ந்து அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களினாலும், திமுக தலைமை மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியைவிட்டே நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

 மக்களவைத் தேர்தலின் போது திமுக வேட்பாளர்களைத் தோற்கடிக்கவேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி பகிரங்கமாக உத்தரவிட்டார். தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளைக்கான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பிரமுகர்கள் பொன்.முத்துராமலிங்கம், வேலுச்சாமி ஆகியோர் மு.க.அழகிரியை பகிரங்கமாக விமரிசித்துப் பேசியது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 திமுக பிரமுகர்கள் விமரிசனத்துக்கு அழகிரி இதுவரை வெளிப்படையாக பதில் கூறவில்லை. ஆனால், மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் திடீரென போஸ்டர் அடித்து நகரமெங்கம் ஒட்டியுள்ளனர். அதில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்தை விமரிசித்திருந்தனர். போஸ்டரில் அழகிரியின் அன்புத்தம்பிகள் என்றிருந்ததே தவிர, அச்சடித்த அச்சகப் பெயரோ, அழகிரி ஆதரவாளர்கள் பெயரோ இல்லை.

 இந்தநிலையில், போஸ்டர் குறித்தும் அதை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திமுக மாநகர் மாவட்ட வழக்குரைஞர் அணி சார்பில் சு.கருணாநிதி என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.

 புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில், தெப்பக்குளம், விளக்குத்தூண், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையங்களில் போஸ்டர்கள் ஒட்டியவர்கள் குறித்து வழக்குப்பதிந்துள்ளதாக போலீஸார் கூறினர்.

 மதுரையில் இதுவரை அழகிரி ஆதரவாளர்கள் அளித்த புகாரின் பேரில்தான் திமுகவின் முன்னாள் மேயர் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது முதன்முறையாக மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது திமுக வழக்குரைஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com