தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைவாங்கி தருவதாகக்கூறி இளநிலை வேலைவாய்ப்பு அலுவலரை ஈரோடு மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கருவேப்பம்பட்டி பிரிவு அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் பி.கிருஷ்ணன் (53). ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். அதேபோல பவானி ஆப்பக்கூடல் மேவாணி பகுதியை சேர்ந்தவர் கண்மணி. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள்.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு மின்வாரியத்தில் ஆள் எடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பவானி சிங்கம்பேட்டை அருகே மொண்டிபாளையத்தை சேர்ந்த எஸ்.தர்மலிங்கம் (34), அவரது உறவினர் சென்னம்பட்டியை சேர்ந்த மரகதம் ஆகியோர் மின்வாரிய வேலைவாய்ப்பு தொடர்பாக கண்மணியை அணுகினார்களாம்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனக்கு அறிமுகமான அதிகாரி, பணியில் இருப்பதாகவும் ரூ.70,000 கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாகவும் கண்மணி கூறினாராம். இதை நம்பி இவர்கள் இருவரும் பணம் கொடுத்தார்களாம். இதுபோல கோபி, ஈரோடு, காசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களிடம் மொத்தம் ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் வரை வசூல் செய்தாராம்.
இருப்பினும் ஓராண்டாக பணிநியமன ஆணையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லையாம். இது தொடர்பாக மாவட்டக் குற்றப்பிரிவில் தர்மலிங்கம் புகார் செய்தார். இது குறித்து மாவட்டக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.தனராசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் வேலைவாங்கித் தருவதாக பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கிருஷ்ணன், கண்மணி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து திருச்செங்கோடுக்கு வெள்ளிக்கிழமை சென்ற போலீஸார், கிருஷ்ணனை அவரது வீட்டில் கைது செய்தனர். கண்மணி தலைமறைவாகிவிட்டதால் அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.