கடைகளுக்கான மின் இணைப்பை துண்டித்தற்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையை வழக்குச் செலவிற்காக ரூ.3 ஆயிரத்துடன் சேர்த்து வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் சு.சுரேஷ். இவருக்கு கோட்டைப்பட்டியில் மூன்று கடைகள் உண்டு. இதற்கு மூன்று மின் இணைப்புகள் பெற்றுள்ளார். கடைகளை வாடகைக்கு விட்டு அனுபவித்து வந்துள்ளார். ஒப்பந்தம் முடிந்ததால், வாடகைதாரர்கள் கடைகளை சுரேஷிடம் ஒப்படைத்து விட்டனர். பராமரிப்பு வேலைகளுக்காக கடையை அப்படியே வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடைகளுக்கு மின் பயனீட்டுக்குரிய குறைந்தபட்ச அடிப்படைக் கட்டணம் ரூ.120 இரு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு கடைக்குமட்டும் 2.4.13-ம் தேதி மின்கட்டணமாக ரூ.240 கணக்கிடப்பட்டிருந்துள்ளது. மற்ற இரு கடைகளுக்கும் தலா ரூ.120 நிர்ணயிக்கப்பட்டிருந்துள்ளது. இது குறித்து இளம் மின் பொறியாளரிடம் சுரேஷ் புகார் செய்துள்ளார். அதற்கு அவர், மின்பழு 1160 வாட்ஸ் என கணக்கிடப்பட்டுள்ளது. 1.4.12 முதல் நிலுவைத் தொகை ரூ.606, மற்றும் ஏற்கனவே கணக்கீட்டின்படி ரூ.240-ம் சேர்த்து ரூ.846 என கணக்கிடப்பட்டு கணினியில் பதிவு செய்துவிட்டோம். அதனை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை ஆட்சேபித்து 12.4.13-ம் தேதி சுரேஷ் அவருக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து இளம் மின் பொறியாளர், 27.4.13-ம் தேதி 1160 வாட்ஸ் என்று மின் பயனீட்டு அளவு தவறுதலாக பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், குறிப்பிட்ட கடைக்கு ஏற்கனவே செலுத்தி வந்த முந்தைய சராசரி கட்டணத்தையே செலுத்தினால் போதும் என்றும் குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதன்படி மின்கட்டணம் செலுத்த சென்றபோது, சராசரி மின்கட்டணத்தை வாங்க மறுத்து விட்டார்களாம். மேலும் 12.4.13-ம் தேதி அறிவிப்பில் கண்டுள்ள ரூ.846-ஐ செலுத்தியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்களாம்.
இதனை ஆட்சேபித்து கோட்ட செயற் பொறியாளருக்கு சுரேஷ் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கு பதில் அளிக்காமல், மூன்று கடைகளின் மின் இணைப்பையும் துண்டித்துவிட்டார்களாம். இதனை ஆட்சேபித்து விருதுநகர் மின்வாரி தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கும் பதில் இல்லையாம்.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சுரேஷ் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி வி.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகசெல்வி ஆகியோர் விசாரித்தனர்.
அவர் அளித்த தீர்ப்பு விவரம்: சுரேஷ், மின் இணைப்புகளுக்கு 2 மாதத்திற்கு ரூ.120 வீதம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட காலம் வரையுள்ள நிலுவைத் தொகையை அபராதம் இல்லாமல் செலுத்தவதன் பேரில், மின்வாரியம் மூன்று கடைகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் மன உளச்சல், சேவை குறைபாட்டிற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ரூ.10 ஆயிரத்தை வழக்குச் செலவுத் தொகை ரூ.3 ஆயிரத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். இந்த உத்தரவு பிறப்பித்த ஒரு மாதத்திற்குள் இத் தொகை வழங்கப்படவேண்டும்.
மூன்று மின் இணைப்புகளிலும் மின் பழு மற்றும் மின் பயன்பாடு குறித்து திருத்தம் செய்ய வேண்டியது சட்டப்படி அவசியமானது என்று மின்வாரியம் கருதினால், சுரேஷுக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு, அது குறித்து தெளிவாக ஆய்வு செய்து, ஆய்வின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க எந்த கடையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.