தஞ்சாவூரில் அரசுப்பள்ளி ஆசிரியையாக இருந்த மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த கல்லூரி விரிவுரையாளராக இருந்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் எம்.பழனிஸ்வரன் (39). இவர் வல்லத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சீதளாதேவி (30). இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சீதளாதேவி வாண்டையார் இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். பள்ளியிலிருந்து வீட்டிற்கு சீதளாதேவி அடிக்கடி தாமதமாக வந்ததால், அவரின் நடத்தையில் கணவர் பழனிஸ்வரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி தம்பதிகளுககுள் ஏற்பட்ட தகராறில், பழனிஸ்வரன் அரிவாளால் மனைவி சீதளாதேவியை வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீஸôர் வழக்கு பதிவு செய்து, பழனிஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்குரைஞர் ஆர்.சதீஷ்குமார் அரசு தரப்பு வழக்குரைஞராக ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து வியாழக்கிழமை நீதிபதி எஸ்.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், மனைவியை கொலை செய்ய கணவர் பழனிஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அதைக்கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதையடுத்து பழனிஸ்வரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.