சென்னை மணப்பாக்கத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் மின்சார பாதிப்பால் 18 நோயாளிகள் உயிரிழந்ததாக வந்த தகவலில் உண்மையில்லை என்று தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நோயாளிகள் உயிரிழந்ததாக வெளியான தகவல் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அந்த தனியார் மருத்துவமனையில் டிசம்பர் 1ம் தேதி மொத்தம் 525 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அதன்பிறகு 300 பேர் டிஸ்ஜார்ஜ் ஆகிவிட்டனர். பிறகு 200 நோயாளிகள் வரை அங்கு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் அவசர சிகிச்சைப் பிரிவில் 75 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் உயிரிழக்கவில்லை. கடந்த 3 நாட்களில் ஒவ்வொருவராக பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தால் ஒரே நேரத்தில் அனைவரும் உயிரிழந்திருப்பர். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
அதே போல, அவர்களுடன் சிகிச்சை பெற்று வந்த மற்றவர்கள் பத்திரமாக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த இறப்புகள் பல்வேறு நேரங்களில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏன் அனைத்து உடல்களும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது என்றால், மருத்துவமனையின் பொது சுகாதாரம் கருதியே, அவை அங்கிருந்து வெளியே கொண்டுவரப்பட்டன.
எந்த நோயாளியும் வென்டிலேட்டர் இல்லாமலோ, ஆக்ஸிஜன் இல்லாமலோ உயிரிழக்கவில்லை. பிரேத பரிசோதனைக்குப் பிறகே இறப்புகளுக்கான காரணங்கள் தெரியவரும்.
மற்றவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். மற்ற மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.