விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் தொடக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில்   தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி செயல்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில்   தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி செயல்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

இம்மாவட்டத்தில் கரீப் நெல் கொள்முதல் பருவம் நிகழாண்டில் விவசாயிகள் பயன்பெறவும், விலை வீழ்ச்சியிலிருந்து காக்கும் வகையிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் 13 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையங்கள் சேத்தூர், தேவதானம், வத்திராயிருப்பு, கான்சாபுரம், மம்சாபுரம், திருஷ்ணன்கோவில்(ரெங்கபாளையம்), நொச்சிகுளம், உலக்குடி, நாலூர், நரிக்குடி, வேலங்குடி, வேளானேரி, காரியாபட்டி(செவல்பட்டி) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நேரடி கொள்முதல் நிலையம் மூலம் 1 குவின்டாலுக்கு ஏ கிரேடு ரகத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1400ம், ஊக்கத்தொகையாக ரூ.70 என மொத்தம் ரூ.1470-க்கும், நெல் பொது ரகத்திற்கு குறைந்தபட்ச விலையாக ரூ.1360ம், ஊக்கத் தொகையாக ரூ.50ம் ஆக மொத்தம் ரூ.1410-க்கும் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. ஆகவே விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சுத்தம் செய்து அதிகபட்சமாக ரூ.17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதைத் தவிர விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகத்தில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்சம் 300 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வைத்துள்ள விவசாயிகள் கிட்டங்கியில் தெரிவிக்க வேண்டும். உடனே நடமாடும் கொள்முதல் நிலைய அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டு நேரிடையாக கொள்முதல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகத்தின் தொலைபேசி எண்களான 04562-252607 மற்றும் மண்டல மேலாளர் செல்லிடப்பேசி எண்-9442132016 ஆகியவைகளில் தொடர்பு கொள்ளலாம். எனவே விவசாயிகள் அனைவரும் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com