விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் காவல் துறை சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தமிழநாடு அரசால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு திறன் வாய்ந்த பயிற்சியாளர்களால் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று 500-க்கும் மேற்பட்டோர் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், போட்டி தேர்வாளர்கள் பயன்படுத்துவதற்கான அனைத்து புத்தகங்களும் அடங்கிய நூலகங்களும் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்திற்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற வருகின்றனர். வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் நிபுணர்கள் அழைத்து வந்து பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்துள்ளவர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சி வகுப்பு சூலக்கரையில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 28ம் தேதி முதல் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடத்தப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் புகைப்பட நகலுடன் தங்களது பெயர் பதிவு செய்து பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.