எழுத்தாளரும், கலை, இலக்கிய விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான சி.மோகனுக்கு "விளக்கு விருது' வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு சார்பில் புதுமைப்பித்தன் நினைவாக ஆண்டுதோறும் "விளக்கு விருது' வழங்கப்பட்டு வருகிறது.
2014ஆம் ஆண்டுக்கான விருதுக்கு சி.மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
"விந்தை கலைஞனின் உருவச் சித்திரம்' (நாவல்), "தண்ணீர் சிற்பம்' (கவிதை) "எனக்கு வீடு, நண்பர்களுக்கு அறை' (கவிதை) உள்ளிட்டவை சி.மோகனின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.
ஓநாய் குலச் சின்னம் என்ற சீன நாவலையும் உலகச் சிறுகதைகள் பலவற்றையும் மொழிபெயர்த்துள்ளார்.
சி.மோகனுக்கு விருது வழங்கப்பட்டது தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருப்பதாவது:
தமிழிலக்கியப் பரப்பில் முக்கியமான பங்களிப்பை தன் விமர்சனக் கருத்துகள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் நிகழ்த்தியவர் சி.மோகன்.
இவரது மொழியாக்கத்தில் வந்த "ஓநாய் குலச் சின்னம்' தமிழ் மொழியாக்கங்களில் ஓர் அலையை உருவாக்கிய படைப்பு.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
"விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்' நாவல் ஓவியர் ராமானுஜத்தின் வாழ்வை மையமாகக் கொண்ட சிறந்த நாவல். பன்முக ஆளுமையான சி. மோகனுக்கு இந்த விருது அளிக்கப்படுவது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.