தாகத்தால் வன விலங்குகள் பரிதவிப்பு: நடவடிக்கை எடுக்குமா வனத் துறை?

ஆம்பூர் அருகே வனப் பகுதியில் போதிய குடிநீர் இல்லாததால் வன விலங்குகள் தவிக்கின்றன. எனவே வனத் துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்க
தாகத்தால் வன விலங்குகள் பரிதவிப்பு: நடவடிக்கை எடுக்குமா வனத் துறை?
Updated on
1 min read

ஆம்பூர் அருகே வனப் பகுதியில் போதிய குடிநீர் இல்லாததால் வன விலங்குகள் தவிக்கின்றன. எனவே வனத் துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வனப் பகுதி எல்லையோர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் குடிநீர் மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. மற்ற காலங்களில் குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலே போதும். ஆனால் கோடைக்காலத்தில் அதிக அளவு குடிநீர் தேவைப்படும். ஆனால் வறட்சி காரணமாக குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
 வன விலங்குகளுக்குத் தேவையான குடிநீரை சேமித்து வைக்க பல்வேறு திட்டங்கள் மூலம் தண்ணீர்க் குட்டைகளையும், ஆழ்துளைக் கிணறுகளையும் வனத் துறை அமைத்தது. அதனால் அப்போது வன விலங்குகளுக்குத் தேவையான குடிநீர் கிடைத்தது.
 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையால் வனப் பகுதியில் ஓரளவுக்கு குட்டை, சிறிய தடுப்பணை, ஏரிகளில் தண்ணீர் நிரம்பியது. ஆனால் தற்போது அவை வறண்டு போயுள்ளன. எனவே, வன விலங்குகள் குடிக்க நீர் இல்லாமல் தவிக்கின்றன.
 ஆம்பூர் வனச் சரகத்தில் ஆம்பூர், சாணாங்குப்பம் காப்புக் காடு பகுதியில் ஓரளவுக்கு குட்டைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால், தற்போதைக்கு வன விலங்குகளுக்கு குடிநீர் பிரச்னை இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமான வெயில் காய்வதால், ஆம்பூர், சாணாங்குப்பம் காப்புக் காடுகளிலும் விரைவில் தண்ணீர் வறண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 துருகம் காப்புகாடு, காரப்பட்டு, கெம்பசமுத்திரம் ஆகிய காப்புக் காடு பகுதிகளில் குட்டைகள், சிறிய தடுப்பணைகளில் தண்ணீரே இல்லாமல் வறண்டு போயுள்ளன. இந்தப் பகுதியில் தான் அதிக அளவு மான்கள் வசித்து வருகின்றன. அவை குடிக்க தண்ணீர் தேடியும், பிஞ்சு மாங்காய் போன்ற உணவைத் தேடியும் கிராமப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. அது மான்களுக்கு ஆபத்தானதாகும்.
 அவை மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வராமல் தடுக்க, காட்டுக்குள்ளேயே அவற்றுக்குத் தேவையான தண்ணீரை கிடைக்கச் செய்ய வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளைச் சரிசெய்து அவற்றிலிருந்து தண்ணீர் பெறுவதற்கான முயற்சிகளை வனத் துறை எடுக்க வேண்டும். தண்ணீர்க் குட்டைகளைத் தூர்வாரி சரிசெய்து, தண்ணீர் தேக்குவதற்கும் திட்டமிட வேண்டும். அப்போதுதான் கோடைக்காலத்தில் வன விலங்குகளுக்குத் தேவையான குடிநீரை போதிய அளவில் வழங்க முடியும்.
 வனப்பகுதி எல்லையோரம் உள்ள விவசாயிகள், கிராம வனக் குழு, தன்னார்வ அமைப்புகள் ஆகியவற்றின் உதவியுடன் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு போதிய குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை வனத் துறையினர் எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com