பொன்னையன், அப்பல்லோ நிர்வாக இயக்குநர் மீது வழக்கு பதிய கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன்,
Updated on
1 min read

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை ஜனவரி 9 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி சட்டபேரவைத் தேர்தல் கடந்த மாதம் நடந்தபோது, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்துடன், அவர் சார்பில் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பத்திரிகை செய்திக்குறிப்பு வெளியிட்டார்.
அதிலிருந்த கையெழுத்து ஜெயலலிதாவின் கையெழுத்து அல்ல; அது மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மற்றும் பொன்னையன் ஆகியோருக்கு எதிராக, சென்னை காவல் துறை ஆணையரிடமும், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்தப் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டிராஃபிக் ராமசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தன்னை வாதிட அனுமதிக்குமாறு அவரது மாணவி எனக் கூறி பாத்திமா என்பவர் முறையிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 9 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com