கானல் நீரா கேந்திரிய வித்யாலயம்?

துறைமுகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் நிறைந்துள்ள முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடியில், கேந்திரிய வித்யாலயம் பள்ளி அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களிடையே மட்டுமன்றி பொதுமக்கள் ம
கானல் நீரா கேந்திரிய வித்யாலயம்?
Updated on
2 min read

துறைமுகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் நிறைந்துள்ள முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடியில், கேந்திரிய வித்யாலயம் பள்ளி அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களிடையே மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனங்களில் வெவ்வேறு மாநிலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்கள் பணிமாறுதல் பெற்று செல்லும்போது அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, கேந்திரிய வித்யாலய பள்ளிகளை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மத்திய அரசு நடத்தி வருகிறது.
கடந்த 1963ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மத்திய கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்படுகிறது. கேந்திரிய வித்யாலய பள்ளிகள் இந்தியாவில் மட்டுமன்றி காத்மாண்டு, மாஸ்கோ, தெஹ்ரான் போன்ற இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.
ஹிந்தி, ஆங்கிலப் பாடத்திட்டத்துடன், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சம்ஸ்கிருதம் கட்டாயமாக சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாலும் அங்கு கேந்திரிய வித்யாலய பள்ளிகள் இருந்தால் குழந்தைகளின் கல்வியில் சிக்கல் எதுவும் ஏற்படுவதில்லை என்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
பொதுவாக கேந்திரிய வித்யாலய பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகளவில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களை கருத்தில்கொண்டு அங்கு பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்படுகிறது.
மத்திய அரசுப் பணியாளர்களை போல மாநில அரசுப் பணியாளர்களும் தங்களது குழந்தைகளை கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் சேர்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றியுள்ள அண்டை மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் இரண்டு கேந்திரிய வித்யாலய பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், திருநெல்வேலி, நாகர்கோவில், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் உள்ளன.
ஆனால், தூத்துக்குடியில் துறைமுகம், ரயில் நிலையம், விமான நிலையம், கடல்சார் பயிற்சிக் கல்லூரி, மத்திய தொழில்பாதுகாப்புப் படை, வணிகவரி அலுவலகம், மீன்வளக் கல்லூரி, பழையகாயல் ஜிர்கோனியம் வளாகம், முத்தையாபுரம் கனநீர்ஆலை, சுங்கத்துறை அலுவலகம் என மத்திய அரசு நிறுவனங்கள் நிறைந்து காணப்பட்டும் இம்மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க இதுவரை எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்நிறுவனங்களில் பணிபுரியும் மத்திய அரசின் பணியாளர்கள் கேந்திரிய வித்யாலய பள்ளி இல்லாததால் தங்கள் குழந்தைகளை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்ட தனியார் பள்ளிகளில் படிக்க வைத்து வருகின்றனர். அவர்களில் திடீரென இடமாறுதலில் செல்லும் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கேந்திரிய வித்யாலய பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதையை மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை அறிவித்தார்.
இதற்கு இடம் ஒதுக்க தூத்துக்குடி வஉசி துறைமுக நிர்வாகம் முன்வந்தது. ஆனால் அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலய பள்ளி என்பது கானல் நீராகவே உள்ளது.
இப்பள்ளிகளில் கட்டணம் குறைவு என்பதாலும், சுமார் 20 சதவீதம் வரை அரசு ஊழியர் அல்லாதவர்களுக்கு இடம் வழங்கப்படும் என்பதாலும் பொதுமக்களும் கேந்திரிய வித்யாலய பள்ளியை எதிர்நோக்கி உள்ளனர். ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களைக் கொண்ட தூத்துக்குடியில், கேந்திரிய வித்யாலய பள்ளி அமைவது எப்போது என்ற எதிர்பார்ப்பு மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com