அதிகரிக்கும் தற்கொலைகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலை நிகழ்வுகளைத் தடுக்க, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மன நல ஆலோசனை மற்றும் சிகிச்சை மையங்களை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதிகரிக்கும் தற்கொலைகள்
Updated on
2 min read

நாமக்கல்: தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலை நிகழ்வுகளைத் தடுக்க, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மன நல ஆலோசனை மற்றும் சிகிச்சை மையங்களை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

குடும்ப பிரச்னை, அலுவலக பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில்தான் அனைவரும் வாழ்ந்து வருகின்றனர். அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வழி தேடுவதே அதற்குரிய மருந்தாகும். ஆனால், அதைச் செய்யாமல் மனதைக் கடுமையான நிர்பந்தத்துக்கு உள்ளாக்கும்போது இறுதித் தீர்வாக தற்கொலை முடிவு ஏற்படுகிறது. இதில், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லை. இந்தியாவில் தமிழகம், அஸ்ஸாம், பிகார் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நிகழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வேலையில்லாமல் இருப்பவர்கள்தான் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனத் தெரிய வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 15,000 பேரும், சென்னையில் மட்டும் 1,500 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்கொலை எண்ணிக்கையில், தமிழகம் கடந்த சில ஆண்டுகளாக தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் உள்ளது என்ற புள்ளிவிவரம் மிகுந்த வேதனைக்குரியது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக 13 வயதுக்குள்பட்ட சிறுவர், சிறுமியர் தற்கொலை நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன.

சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரி ஹரிஷ் தற்கொலை, திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணுபிரியா தற்கொலை போன்ற நிகழ்வுகள் தற்கொலை எண்ணம் அனைத்துத் தரப்பினரிடமும் பரவி இருப்பதையே உணர்த்துகிறது.

இதுகுறித்து மனநல நிபுணர்கள் கூறியதாவது:

அதிக மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பதும், கட்டாயங்களுக்காக வாழ்க்கையை வாழாமல் விருப்பத்துக்கேற்ப வாழ்வதே வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்க கூடியதாக இருக்கும்.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மன அழுத்தத்தைக் குறைக்க, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் செயல்படும் மனநோய் ஆலோசனை, சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்றனர் அவர்கள்.

மனநலப் பிரிவு தேவை: இதுகுறித்து கல்வியாளர் ஆர். பிரணவகுமார் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைத் தவிர்த்து, அரசு மருத்துவமனைகளில் வாரத்தில் ஒரு நாள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே மனநலப் பிரிவு செயல்படுகிறது. ஒரே மருத்துவர்தான் மாவட்டம் முழுவதும் உள்ள 4 முதல் 5 அரசு மருத்துமனைகளுக்குச் சென்று சிகிச்சை, ஆலோசனை அளித்து வருகின்றார்.

ஒரு மருத்துவரால் தினமும் அதிகபட்சமாக 25 பேருக்கு மேல் சிகிச்சை அளிக்க முடியாது. இதனால், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 10 மனநல மருத்துவர்கள், 30 மனநல ஆலோசகர்கள் வரை நியமித்து, அரசு மருத்துவமனைகளில் வாரத்தில் 3 நாள்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்தில் 2 நாள்கள் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும்.

மேலும் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் மாதம் ஒரு நாள் கட்டாயமாக மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதன்மூலம், தற்கொலைகள் குறைவதோடு, பாதை மாறும் மாணவர்களை நல்வழிப்படுத்தவும் முடியும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com