வறண்டுபோகும் நிலையில் அமராவதி அணை

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் தற்போது இருக்கும் 24 அடி நீர்மட்டத்தில் "சில்ட்' எனப்படும் 15 அடி நீங்கலாக, 9 அடி தண்ணீரே இருப்பு உள்ளது. இதனால், குடிநீர்ப் பிரச்னை ஏற்படும் என நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Updated on
1 min read

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் தற்போது இருக்கும் 24 அடி நீர்மட்டத்தில் "சில்ட்' எனப்படும் 15 அடி நீங்கலாக, 9 அடி தண்ணீரே இருப்பு உள்ளது. இதனால், குடிநீர்ப் பிரச்னை ஏற்படும் என நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமராவதி அணை மூலமாக திருப்பூர், ஈரோடு, கரூர் என மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த தொடர் மழையால், அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டியது. அதன் பிறகும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. ஆனாலும், உள்வரத்தாக வந்த நீரை அணையில் சேமிக்க முடியாமல் போனது. இதனால், 3 டிஎம்சி அளவுக்குத் தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்குப் பாசனத்துக்காக, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு

மாதங்களாகத் தொடர்ந்து பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில், படிப்படியாக அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது. அதேசமயம்,

சின்னாறு, தேனாறு, பாம்பாறு போன்ற அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது.

வழக்கமாக பாசனப் பகுதிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை பாசனக் காலம் இருக்கும் நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது.

வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 24.26 அடியாக இருந்தது. மார்ச் இறுதி வரை பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், அணையின் நீர் இருப்பு குறைந்துள்ளது விவசாயிகளிடையே ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்தக் கோடைக் காலத்தில் குடிநீர்ப் பிரச்னை ஏற்படும் என நூற்றுக்கணக்கான கரையோர கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com