

கூடுவாஞ்சேரி அருகே வனத்துறையினரின் குறுக்கீட்டால் ஊரப்பாக்கம் - நல்லாம்பாக்கம் சாலையைச் சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூடுவாஞ்சேரி அருகே மாநில ஊரக நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான 14 கி.மீ. தொலைவு ஊரப்பாக்கம் - நல்லாம்பாக்கம் சாலை, சென்னை - திருச்சி செல்லும் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் இணைகிறது.
18 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக கிடக்கும் இச்சாலையைச் சீரமைக்க வேண்டி பொதுமக்கள் கோரி வந்தனர். இதைத் தொடர்ந்து 2006-இல் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலையைச் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் காட்டூரிலிருந்து அருங்கால் வரையிலும், நல்லாம்பாக்கத்தில் இருந்து ஊனமாஞ்சேரி வரையிலும் உள்ள சாலைப் பகுதி வனத்துறைக்குச் சொந்தமானது என்பதால், சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து மீண்டும் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மறுபடியும் 2014-இல் கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது வனத்துறையினர் மீண்டும் குறுக்கிட்டு, வனத்துறைக்குச் சொந்தமான பகுதியில் சாலை அமைக்கப்பட்டால், அதற்கு மாற்றாக இரண்டு மடங்கு நிலத்தை ஒதுக்கித் தரவேண்டும் என்று கூறியதையடுத்து மீண்டும் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் வனத்துறையிடம் பேசி உடனடியாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையைச் சீரமைக்க வேண்டும் என்றும், இல்லையேல் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி, தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.