போலீஸாருடன் ரோந்துப் பணியில் பொதுமக்கள்!

சென்னையில் குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொதுமக்களை தகவல் அளிப்பவர்களாக காவல் துறை மாற்றி வருகிறது.
Updated on
2 min read

சென்னையில் குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொதுமக்களை தகவல் அளிப்பவர்களாக காவல் துறை மாற்றி வருகிறது. இதேபோல, பொதுமக்களை ரோந்துப் பணியிலும் போலீஸார் ஈடுபடுத்தி வருகின்றனர்.
 சென்னையில் தங்கச் சங்கிலி பறிப்பு, செல்லிடப்பேசி திருட்டு, மோட்டார் சைக்கிள் திருட்டு போன்ற சம்பவங்கள் தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதைத் தடுப்பதற்கு காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இந்தச் சம்பவங்களை முற்றிலுமாகத் தடுக்க முடியவில்லை. உதாரணமாக, செல்லிடப்பேசி திருட்டு ஆண்டுதோறும் சுமார் 39 சதவீத அளவுக்கு அதிகரிக்கிறது. ஆனால், செல்லிடப்பேசி திருட்டு தொடர்பான புகார்கள் பெருமளவு காவல் நிலையங்களுக்கு வருவதே இல்லை.
 சவாலான பணி: வீடு புகுந்து திருடுவது, வழிப்பறியில் ஈடுபடுவது, கொள்ளையடிப்பது போன்ற குற்றச் சம்பவங்களைவிட தங்கச் சங்கிலி பறிப்பு, செல்லிடப்பேசி திருட்டு, மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவற்றில் ஈடுபடுவது மிகவும் எளிதானது எனக் கொள்ளையர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இத்தகைய சம்பவங்களில் அதிக சிரமமின்றி பொருள்களைக் கவர்ந்துவிடலாம் என்பதால், இந்தக் குற்றங்கள் அதிகரிப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 மேலும், இந்தச் சம்பவங்களில் குற்றவாளிகளின் அடையாளங்களையும், அவர்களைப் பற்றிய தகவல்களையும் துப்பு துலக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இதன் விளைவாக, இந்தக் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கைது செய்வது போலீஸாருக்கு சவாலான பணியாகவே உள்ளது.
 உடனுக்குடன் தகவல்: இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குற்றத் தடுப்பு நடவடிக்கைக்கு சென்னை காவல் துறை முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மயிலாப்பூர் பகுதியில் பொதுமக்களையே தகவல் அளிப்பவர்களாக மாற்றும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
 முதல் கட்டமாக, மெரீனா கடற்கரை கண்ணகி சிலையில் இருந்து ஐஸ்ஹவுஸ் வரை கடை வைத்திருக்கும் வியாபாரிகளையும், சாலையோர நடைபாதை வியாபாரிகளையும் தகவல் அளிப்பவர்களாக காவல் துறை மாற்றியுள்ளது. சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடும் நபர்கள், மோட்டார் சைக்கிள்களை திருட முயற்சிப்பவர்கள், தனியாகச் செல்லும் பெண்கள், குழந்தைகளை நோட்டமிடும் நபர்கள் ஆகியோரைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அளிக்கும்படி இவர்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
 மேலும், இவர்களுடன் எந்த நேரமும் தொடர்பில் இருக்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்தப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும், சாலையோரக் கடை வியாபாரிகளும் காவல் துறைக்கு தகவல் அளித்து வருகின்றனர்.
 குற்றங்கள் குறைந்துள்ளன: இதேபோல, அந்தப் பகுதியில் ரோந்துப் பணிக்கும் இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 10 பேராவது தாங்களாகவே முன்வந்து போலீஸாருடன் ரோந்து செல்கின்றனர். இவர்கள் பிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை போலீஸாருடன் ரோந்து செல்கின்றனர்.
 இதன்மூலம், தங்கச் சங்கிலி பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு, செல்லிடப்பேசி திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
 கடந்த ஒரு மாதமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போது, 300 பேர் எங்களுக்குத் தகவல் அளித்து வருகின்றனர். இதனால் மெரீனா, மயிலாப்பூர் பகுதிகளில் நடைபெற்று வந்த மோட்டார்சைக்கிள் திருட்டு, செல்லிடப்பேசி திருட்டு ஆகியவை பெருமளவு குறைந்துள்ளது. இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com