திருவள்ளூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானதில் திருவள்ளூர் மாவட்ட அளவில் கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில் திருவள்ளூர் அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை 6 மாணவர்கள் பிடித்துள்ளனர்.
அதில், கவரப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமாவதி தமிழில் 99, ஆங்கிலத்தில் 94, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 உள்பட 493 மதிப்பெண்பெற்று முதலிடத்தையும், அதே போல் பொதட்டூர்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி மோனிஷா தமிழில் 97, ஆங்கிலத்தில் 96, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 உள்பட 493 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும் பிடித்துள்ளனர்.
புதுகும்மிடிப்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர் குமார் தமிழில் 95, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 100, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 100 உள்பட 492 மதிப்பெண்ணும், அதே போல் வங்கனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் வசந்தகுமார் தமிழில் 96, ஆங்கிலத்தில் 96, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 உள்பட 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
அம்மையார்குப்பம் ஏகேஎம் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி வேதநாயகி தமிழில் 98, ஆங்கிலத்தில் 95, கணிதத்தில் 100, அறிவியலில் 98, சமூக அறிவியலில் 100 உள்பட 491 மதிப்பெண்ணும், திருத்தணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சுவாதி தமிழில் 96, ஆங்கிலத்தில் 96, கணிதத்தில் 100, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 100 உள்பட 491 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.