இயந்திரமுறை நெல் நடவுக்கான தொழில்நுட்பங்கள்

இயந்திர நெல்நடவு முறையை மேற்கொள்ள பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
இயந்திரமுறை நெல் நடவுக்கான தொழில்நுட்பங்கள்
Updated on
2 min read

இயந்திர நெல்நடவு முறையை மேற்கொள்ள பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.

விதை நேர்த்தி: விதைப்புக்கென வைத்திருக்கும் விதைகளில் வீரியம் குறைந்த விதைகளை பிரித்து எடுக்க 15 லிட்டர் கொள்ளளவுடைய பிளாஸ்டிக் வாளியில் 10 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் முட்டையை போட வேண்டும். அதைத்தொடர்ந்து, சமையல் உப்பை சிறிது சிறிதாக தண்ணீரில் போட்டு கரைக்கவேண்டும்.
உப்பு கரைந்து நீரின் அடர்த்தி அதிகமாவதால் முட்டை தண்ணீரின் மேலே மிதந்துவரும் முட்டையின் மேற்பகுதி 50 பைசா அளவுக்கு தண்ணீரின் மேல் தெரியும்போது உப்பை கரைப்பதை நிறுத்தி விடவேண்டும்.அந்த நிலையில்  தண்ணீரின் அடர்த்தி நெல் விதையை தரம் பிரிப்பதற்கு ஏற்றதாக அமைகிறது.
இவ்வாறு தயாரித்த உப்பு கரைசலில் 10 கிலோ நெல் விதைகளை சிறிது சிறிதாக கொட்டும்பொழுது எடை குறைந்த நெல் விதைகள் உப்பு கரைசலில் மிதக்கும். அதே சமயம் எடை அதிகமான, தரமான நெல் விதைகள் கரைசலில் மூழ்கிவிடும். மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு மூழ்கிய விதைகளை வெளியே எடுத்து இரண்டு மூன்று முறை  நீரில் கழுவி விதைகளின் மேல் படர்ந்த உப்பை நீக்கிவிடவேண்டும்.
தரம் பிரித்த விதைகளை சூடோமோனஸ் புளுரசென்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் 24 மணி நேரத்திற்கு மூட்டம் போட்டு முளைக்கட்டிய விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்த வேண்டும்
பாய் நாற்றங்கால்: ஒரு ஹெக்டேர் நடவு செய்ய 100 சதுர மீட்டர் பரப்பில் பாய் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்கால் அமைக்க சமமான இடத்தை தேர்வு செய்து பாசன நீர் ஆதாரத்திற்கு அருகில் சற்று உயரமான மண் படுக்கைகளை அமைக்க வேண்டும்.
நாற்று படுக்கையின் அகலம் நாற்றுகளை இலகுவாக பராமரிக்கக் கூடிய அளவில் ஒரு மீட்டரும் நீளம் வயலின் அமைப்பிற்கேற்றார்போல அமைத்து கொள்ளலாம்.
படுக்கையின் மீது பிளாஸ்டிக் விரிப்பு அல்லது பாலீத்தீன் தாள்கள் கொண்டு பரப்புவதனால் நாற்றின் வேர்கள் மண்ணில் இறங்கி கீழ் நோக்கி செல்வது தடுக்கப்படுகிறது.
பாய் நாற்றங்காலில் பாலீதீன் தாளினை வரித்து அதன் மேல் 1.5 அடி நீளம் 1 அடி அகலம் 5 செ.மீ உயரம் அளவுள்ள செவ்வகங்களை (அகல வாக்கில் இரண்டு செவ்வகமும் நீள வாக்கில் நான்கு செவ்வகம்) உடைய மரசட்டத்தினை வைத்து அதில் தேவையான மண் கலவையை பரப்ப வேண்டும். மண் கலவையில் 70% நன்கு சலித்த வயல் மண், 20% நன்கு மக்கிய பொடியான தொழு உரம் அல்லது மன்புழு உரம் அல்லது கம்போஸ்ட் உரம் 10% நெல் உமி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் 1.5 கிலோ பொடி செய்யப்பட்ட டி.ஏ.பி உரத்தினை கலந்து கொண்டு மரசட்டத்தில் நிரப்ப வேண்டும் இதன் மேல் நன்கு முளை கட்டிய விதைகளை ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் வீதம் சீராக தூவி பின்னர் உலர்ந்த மண்ணை கொண்டு முடி பூவாளி கொண்டு முதல் ஐந்து நாட்கள் வரை  ஒரு நாளிற்கு இரண்டு முதல் மூன்று முறை நீர் தெளித்து விடவேண்டும். பின்னர் பாய் நாற்றங்காலை சுற்றியுள்ள வாய்கால் மூலம் 1-2 செ.மீ உயரத்துக்கு நீர் நிறுத்தி 10 முதல் 20 நாட்கள் வரை பராமரித்து நடவு செய்ய வேண்டும்.
கன மழை அல்லது கூடுதல் வெப்பத்திலிருந்து நாற்றுகளை பாதுகாக்க தென்னங்கீற்று  அல்லது வைக்கோல் கொண்டு மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு மூடாக்கு போட்டு பின்னர் எடுத்துவிட வேண்டும்.நாற்றின் வளர்ச்சி குறைவாக இருந்தால் 0.5% யூரியாவுடன் 0.5 % ஜிங் சல்பேட் கரைசலை விதைத்து 8 முதல் 10 நாட்களில் பாய் நாற்றில் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஏராளமான பலன்களைப் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com