புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாடுவது குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுகை பொதுஅலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு சார் ஆட்சியர் எஸ்.பி. அம்ரித் தலைமை வகித்தார். நகரக்காவல் கண்காணிப்பாளர் எஸ். பாலகுரு முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ. லோகநாதன் கொடியசைத்து பேரணியைத் தொடக்கி வைத்து பேசியதாவது:
வெடிகளை திறந்த வெளியில் வெடிக்க வேண்டும். குடியிருப்பு வீடுகள் உள்ள பகுதிகளில் வெடிக்கக்கூடாது. உடலில் தீப் பிடித்தால் ஓடக்கூடாது. குடிசை வீட்டுக்குள் நிற்கக்கூடாது. எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் இருக்கும் இடத்துக்கும் செல்லக்கூடாது. உடலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைப்பது, அல்லது சம தரையில் படுத்து உருள வேண்டும். தீக் குச்சி, குட்டையான ஊதுபத்திகள், மெழுகுவர்த்திகள் ஆகியவைகளைக் கொண்டு பட்டாசை பற்றவைக்கக்கூடாது. நீண்ட ஊதுபத்திகளை பயன்படுத்த வேண்டும்.. தீக்காயம் ஏற்பட்டால் உப்புத் தண்ணீரை ஊற்றுவதைத் தவிர்க்க வேண்டும். தீக்காயத்தை அழுத்தித் துடைக்காமல், தீப் புண்ணில் குளிர்ந்த நீரை ஊற்றுங்கள். உடன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் எனக்குறிப்பிட்டார். இதில்,பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.