திருவள்ளூர்: இனி வரும் காலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளான நீர்வரத்து கால்வாய் மற்றும் ஏரிகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதுமுள்ள நீர்வரத்து கால்வாய்கள், ஏரி, குளங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
வியாழக்கிழமை அம்பத்தூர், மாதவரம் வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாதவரம் வட்டம், எம்ஜிஆர் நகர் ரெட்டித்தெரு, ரெட்டேரி நீர்த்தேக்கம், கதிர்வேடு, கொரட்டூர் வடக்கு, கொரட்டூர் ஏரி, கொரட்டூர் தமிழ்நாடு குடியிருப்பு நலவாரிய பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய்களை பார்வையிட்டு அதனை பருவமழைக்கு முன்பாக தூர்வார வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அம்பத்தூர் வட்டம் பட்டரவாக்கம் இரயில் நிலையம் பின்புறமும், விஜிஎன். சாந்தி நகர் ஆகிய பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.
அங்குள்ள ஆக்கிரமிப்புக்கள் மற்றும் கட்டிடங்களையும் பார்வையிட்டார்.