மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, குடும்பத்தினர் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள ஆணைக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி மகள்கள் ஜான்சிராணி, பானுமதி ஆகியோர் கடந்த 8-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், சசிகலா புஷ்பா, அவரது தாய் கெளரி ஆகியோர் பலமுறை தாக்கி, தங்களை வீட்டுச் சிறையில் வைத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி புறநகர் உதவி கண்காணிப்பாளர் தீபா ஞானிகர் தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஆபாசமாக திட்டுதல், கையால் அடித்தல், வீட்டில் சிறைவைத்தல், மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண் கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் சசிகலா புஷ்பா, லிங்கேஸ்வர திலகன், பிரதீப் ராஜா, கெளரி ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.