
ராம்குமாரை விடியோ எடுப்பதற்கு அனுமதி கேட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் காவல் துறை மனு தாக்கல் செய்துள்ளது.
சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1-இல் போலீஸார் கைது செய்தனர்.
அப்போது, ராம்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றதால், அவரிடம் வாக்குமூலம் பெற முடியவில்லை. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமார் உடல்நிலை தேறியதும், 5-இல் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, சிறையில் அடையாள அணிவகுப்பு 12-இல் நடைபெற்றது. இதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின்பேரில், 13-ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை 3 நாள்கள் ராம்குமாரிடம் விசாரணை செய்தனர்.
நீதிமன்றத்தில் மனு: இந்த நிலையில், சுவாதி கொலையான நாளன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையப் பகுதியில் தனியார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியுடன், ராம்குமாரை வைத்து எடுக்கும் விடியோ காட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ராம்குமாரை விடியோவில் பதிவு செய்யவும், அவரின் கையெழுத்து பெறவும் அனுமதிக் கேட்டு எழும்பூர் 14-ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நுங்கம்பாக்கம் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.