
சட்டப் பேரவைக்கு கருணாநிதி வந்து செல்லக் கூடிய வகையில் உரிய இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் மேலும் கூறியதாவது:-
அரசு என்னவெல்லாம் ஆசைப்படுகிறதோ, அதையெல்லாம் இந்த ஆளுநர் உரையில் எடுத்துச் சொல்லி இருக்கின்றனர்.
அதே நேரத்தில் அவற்றையெல்லாம் எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து எந்த விவரமும் எந்தவித விளக்கமும் அதில் இடம்பெற்று இருக்கவில்லை. அம்மா திட்டங்கள் தொடர்பாக, ஆளுநர் உரையில் பெரிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற கம்பெனிகள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடப் போவதாக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த இரு தொழிற்சாலைகளும் இங்கிருந்து செல்வதற்கு காரணமாக இருந்தது அதிமுக ஆட்சி என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே, தும்பை விட்டு, வாலைப் பிடிப்பது போன்றதொரு அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் ஆளுநர் உரை அம்மா கால அட்டவணையாக இருந்தது.
கருணாநிதிக்கு இருக்கை: முன்னாள் அமைச்சர்கள், ஏற்கெனவே சட்டப் பேரவையில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கு முறையாக உரிய இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதன் பிறகு புதிய உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதுதான் மரபு.
ஆனால், இப்போது அப்படிப்பட்ட மரபு முறையாக சட்டப் பேரவையில் கடைப்பிடிக்கப்படவில்லை.
கருணாநிதி சபைக்கு வந்து கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், அவர் வந்து செல்லக் கூடிய வகையிலான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்று ஏற்கெனவே முறையாகப் பேரவைத் தலைவருக்கு கடிதம் கொடுத்து உள்ளோம்.
ஆனால், கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கக் கூடிய இடத்தைப் பார்த்தால், அவர் வந்து செல்வதற்கு ஏற்ற வகையில் இருக்கவில்லை என்றார்.