
சென்னை: மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 15 வயதுக்குள் திருமணமானோர் 65,200 பேர் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது. இதன்படி கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது பதிவுசெய்யப்பட்ட பல்வேறு தரவுகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள பெண்களின் வயது, அவர்களது திருமண நிலை குறித்த தரவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதன்படி தமிழகத்தில் மொத்தம் 3,60,09,055 பெண்கள் உள்ளனர். இவர்களில் திருமணமானோர் 2,32,23,396 பேர். இவர்களில் 65,200 பேருக்கு 15 வயதுக்குள் திருமணம் நடைபெற்றுள்ளது. 4,57,314 பேருக்கு 15 வயது முதல் 19 வயதுக்குள் திருமணம் நடைபெற்றதுள்ளது.
மேலும், மொத்தமுள்ள பெண்களில் 1,22,12,039 பேர் படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதுவும் 15 வயதுக்குள்பட்ட பெண்களில் 38,31,813 பேர் படிப்பறிவு இல்லாமல் இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக 45 வயது முதல் 49 வரையுள்ள பெண்களில் 1.03 கோடி பேர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு தரவுகளின்படி தமிழகத்தில் படித்த பெண்களின் எண்ணிக்கை 2.37 கோடியாக உள்ளது. இதில் அதிகபட்சமாக 44.20 லட்சம் பெண்கள் 15 வயதுக்குள்பட்டவர்கள். மேலும், 23.38 லட்சம் பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்துள்ளனர்.