சென்னை: ஆர்.கே. நகரில் தொப்பி அணிந்து கொண்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்பவர்களுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்று அதிமுக (அம்மா) கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து, வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலையில் தொப்பி அணிந்து கொண்டு ஆர்.கே.நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த கருணாமூர்த்தி என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக (அம்மா) கட்சி வேட்பாளர் டி.டி.வி. தினகரன்., ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் எங்கள் அணியை சேர்ந்தவர் இல்லை.
தலையில் தொப்பி அணிந்து கொண்டு பணப்பட்டுவாடா செய்பவர்களுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், தொப்பி அணிந்து பணப்பட்டுவாடா செய்தது திமுகவின் சதிச் செயல் எனவும் டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு.
திமுக மக்களை நம்பி உள்ளது. அதிமுக (அம்மா) கட்சி பணத்தை நம்பி உள்ளது என்று பதிலளித்துள்ளார் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு.
பணப்பட்டுவாடா விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான். திமுவினரே யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறினார்.