சென்னை: நமக்கு வரக்கூறிய எதிர்ப்புகளை விஞ்சி இணைந்து நின்று வெற்றி பெறுவோம் என்று அதிமுக இரு அணிகளின் இணைப்புக்குப் பிறகு நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பலகட்ட காத்திருப்புகளுக்குப் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக இரு அணிகளின் இணைப்பு நிகழ்வானது, ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பிறகு நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழக அரசியல் அரங்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பிடம் உண்டு. அவரால் உருவான நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். நடுவில் சில கருத்து வேறுபாடுகள் உணடானது. இருந்தாலும் அதனை எல்லாம் நாம் கடந்து வந்துள்ளோம்.
ஜெயலலிதாவின் ஆன்மாதான் அதற்கான ஒரு நல்ல வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளது. அதன் காரணமாகவே நாம் இப்பொழுது மீண்டும் சந்திக்கிறோம். நாற்பது ஆண்டு கால வரலாறும் பெருமையும் கொண்டது இந்த இயக்கம். அதற்குள் கருத்து வேறுபாடுகள் வந்தாலும், எம்.ஜி,.ஆரும், ஜெயலலிதாவும் காட்டிய நல்ல வழியில் பின் சென்று தற்பொழுது இணைந்துள்ளோம்.
நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் எண்ணமாகும். அதன்படி தற்பொழுது இணைந்துள்ளோம்.
இந்த இணைப்பினை சாத்தியப்படுத்தியதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி இரண்டாவது தடவையாக ஆட்சிக்கு வந்தது ஜெயலலிதாவால் சாத்தியமானது. அந்த ஆட்சியினை நாம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம்.
நமக்கு வரக்கூறிய எதிர்ப்புகளை விஞ்சி இணைந்து நின்று வெற்றி பெறுவோம். இதற்கு காரணமாக அமைந்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களனைவரையும் மீண்டும் சந்தித்தால் மிக்க மகிழ்ச்சி.
இந்த இயக்கத்தின் சாதாரணத் தொண்டனாக எப்பொழுதும் போல் பணியினைத் தொடர்வேன்.
இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.