சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரான அதுல்ய மிஷ்ராவின் செயல்பாடுகளுக்கு தடை விதித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஐ.ஏ.எஸ் அதிகாரியான அதுல்ய மிஷ்ரா சமீபத்தில் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் இவரது நியமனத்தில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்று புகார்கள் எழுந்தது. ஆனால் அது தொடர்பாக அரசு சார்பில் விளக்கங்கள் எதுவும் அப்பொழுது அளிக்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து அதுல்ய மிஷ்ராவின் நியமனத்திற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கினை இன்று விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், வாரியத் தலைவராக அதுல்ய மிஷ்ராவின் செயல்பாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையின் பொழுது தலைவர் நியமனத்தில் கல்வித்தகுதி உள்ளிட்டவை பின்பற்றப்பட்டுள்ளதாக தமிழக அசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.ஆனால் பிற விதிமீறல்களை சுட்டிக்காட்டிய தீர்ப்பாயம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பொழுது தமிழக அரசு தாக்கல் செய்யும் பதிலினை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கையிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.