

நடிகை திரிஷாவுக்கு எதிராக வருமான வரித் துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை திரிஷா 2010-11 ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலின்போது, தொழில் ரீதியாக சிலரிடம் பெற்ற முன் பணத்தை வருவாயாக சேர்க்காமல் சமர்ப்பித்துள்ளார்.
பின்னர், வருமான வரித் துறை அதிகாரிகள் அவருடைய வருமானம் தொடர்பான ஆய்வை தொடங்கிய பின்னர், திருத்தப்பட்ட வருமான விவரங்களை திரிஷா தாக்கல் செய்துள்ளார். அதில், தான் பெற்ற முன் பணத்தையும், வருவாயாக சேர்த்துக் காண்பித்திருக்கிறார். இதை ஆய்வு செய்த அதிகாரி, வருவாயை மறைத்து கணக்கு காண்பித்ததன் அடிப்படையில், வருமான வரிச் சட்டம் 271(1)சி-யின் கீழ் ரூ.1.11 கோடி அபராதம் விதித்துள்ளார்.
இந்தச் சட்டப் பிரிவின் கீழ், இவ்வாறு வருவாயை மறைத்து கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு 100 முதல் 300 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடியும். இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீடு ஆணையரிடம் நடிகை திரிஷா முறையீடு செய்துள்ளார். இதை விசாரித்த ஆணையர், திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்தார்.
ஆணையரின் இந்த முடிவை எதிர்த்து தீர்ப்பாயத்தில் வருமான வரித் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தீர்ப்பாயமும் மேல்முறையீடு ஆணையரின் முடிவையே உறுதி செய்தது. இதை எதிர்த்து வருமான வரித் துறை ஆணையர் (மத்திய வட்டம்) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.