அதிமுகவின் ’இரட்டை இலை' சின்னம் யாருக்கு? தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று விசாரணை

அதிமுகவின் ’இரட்டை இலை' சின்னம் யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தில்லியில் சசிகலா, தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் தரப்பிடம் தலைமைத் தேர்தல் ஆணையம்
அதிமுகவின் ’இரட்டை இலை' சின்னம் யாருக்கு? தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று விசாரணை
Updated on
2 min read


அதிமுகவின் ’இரட்டை இலை' சின்னம் யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தில்லியில் சசிகலா, தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் தரப்பிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை (மார்ச் 22) விசாரணை நடத்துகிறது. இதையொட்டி, இரு தரப்பு பிரதிநிதிகள், மூத்த வழக்குரைஞர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகவுள்ளனர்.
முக்கிய விசாரணை: இந்த விசாரணையின் போது, அதிமுகவின் தலைமை அங்கீகாரம் தொடர்பான விவகாரம் மட்டுமின்றி, ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு உரிமை கோரும் இரு தரப்பினரில் யாருக்கு அக்கட்சியின் தேர்தல் சின்னமான ’இரட்டை இலை'யை ஒதுக்குவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யவுள்ளது.
ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் மார்ச் 23-ஆம் தேதி என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை நடத்தப்படும் விசாரணையின் முடிவில் ஆணையம் அதன் தீர்ப்பை அளித்தால்தான் மறுதினமான வியாழக்கிழமை (மார்ச் 23) வேட்புமனு படிவத்தில் சின்னத்துக்கு உரிமை கோரி இரு தரப்பும் விண்ணப்பிக்க முடியும். எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவுள்ள உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனு: ’சசிகலா தலைமை கட்சி விரோதமானது' எனவும் ’தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை அங்கீகரிக்க வேண்டும்' எனவும் கூறி மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் தலைமையிலான 12 எம்.பி.க்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியிருந்தனர். அந்தப் புகாருக்குரிய முகாந்திரத்தை நிரூபிக்கக் கூடிய ஆதாரமாக ஓ.பி.எஸ். தலைமையை ஏற்கும் கட்சியின் மாவட்ட, வட்டார அளவிலான லட்சக்கணக்கான உறுப்பினர்கள் கையெழுத்திட்ட சுமார் 6,000 பிரமாணப் பத்திரங்களை ஓ.பி.எஸ். தரப்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது.
இவற்றின் அடிப்படையில் தங்கள் அணி சார்பில் ஆர்.கே. நகரில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மதுசூதனன், ’இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிட விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். தரப்பு கோரியது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோர் கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்து கட்சிக்கும் தேர்தல் சின்னத்துக்கும் உரிமை கோரினர்.
சசிகலா தரப்பு பதில்: இந்நிலையில், மைத்ரேயன் குழுவினரின் மனுவுக்கு, தேர்தல் ஆணைய உத்தரவின்படி அதிமுக தாற்காலிகப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, அவரால் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் ஆகியோர் தரப்பில் செவ்வாய்க்கிழமை பதில் அளிக்கப்பட்டது. ஆறு குறுந்தகடுகள், 57 தொகுப்புகள் அடங்கிய ஆவணங்களை தங்கள் தரப்பு ஆதாரமாக இருவரும் தாக்கல் செய்தனர்.
அதில், ’அதிமுக பொதுக் குழுவில் மொத்தம் உள்ள 2,141 உறுப்பினர்கள், 122 எம்எல்ஏக்கள், 37 எம்.பி.க்கள் ஆகியோர் சசிகலா தலைமையை ஏற்றுள்ளனர்.
இதில் பொதுக் குழுவில் உள்ள 1,912 உறுப்பினர்கள் தங்கள் வரம்புக்கு உள்பட்ட மாவட்ட, வட்ட அளவில் உள்ள கட்சியின் லட்சக்கணக்கான ஆரம்பநிலை உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். அவர்கள் சசிகலா தலைமையை ஏற்றுள்ளதால் அதை அங்கீகரித்து கட்சியின் ’இரட்டை இலை' சின்னத்துக்கு உரிமை கொண்டாட அனுமதிக்க வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com