தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள ஊர்களின் பெயர்களை இந்தியில் எழுதுவது தமிழகத்தில் இந்தி திணிக்கப்படாது என்று மத்திய அரசின் சார்பில் பலமுறை அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு எதிரான செயல் என்பது மட்டுமின்றி, அந்த சாலைகள் வழியாக செல்லும் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகளின் நலன்களுக்கு எதிரான செயலாகும். இச்சாலைகள் அனைத்திலும், அனைத்து ஊர்களிலும் இந்தியில் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. இதுதவிர தமிழகத்தில் தமிழிலும், ஆந்திரத்தில் தெலுங்கிலும், கர்நாடகத்தில் கன்னடத்திலும் ஊர் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன. வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனை, தோல் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு மைல்கற்களில் எழுதப்பட்டுள்ள எந்த மொழியும் தெரியாது என்பதால் அவர்கள் எந்த ஊரை நோக்கிச் செல்கிறோம் என்பது தெரியாமல் தடுமாறுகின்றனர்.