

தமிழகத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரப் பலகைகள் வைக்கத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த கதிர்மதியோன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் ஆண்டு தோறும் அதிகரிக்கும் வாகனங்களால், விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளின் மையத்திலும் குறுக்கேயும் போக்குவரத்து சிகனல்களிலும் சாலை விதிகளுக்குப் புறம்பாக விளம்பரப் பலகைகள் வைக்கப்படுகின்றன.
இந்த விளம்பரப் பலகைகளைச் சுற்றி வண்ணமயமான விளக்குகளும் பொருத்தப்படுவதால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படுகின்றன.
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளின்படி, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவோ, கவனத்தைத் திசை திருப்பும் வகையிலோ விளம்பரப் பலகைகள் வைக்கக்கூடாது. எனவே, போக்குவரத்து சிக்னல்களில் உள்ள விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
ஆனால் உள்ளாட்சி அமைப்புகளும் காவல்துறையினரும் தனியார் நிறுவனங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதிக்கின்றனர். தமிழகத்தின் அனைத்து சாலை சந்திப்புகள் மற்றும் சிக்னல்களில் உள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற உத்தரவிட வேண்டும். புதிதாக விளம்பரங்கள் வைக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை (அக்.30) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரப் பலகைகள் வைக்கவும், ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளுக்கான அனுமதியைப் புதுப்பிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.