டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நீக்க வேண்டுமென டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, அவர்களைத் தகுதியின்மை செய்ய அரசு கொறடா ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் தனபால் அதிமுகவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.-க்களும் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென நோட்டீஸ் பிறப்பித்தார். இதையடுத்து நேற்றுமுன் தினம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், ஏழுமலை ஆகியோர் சட்டசபை செயலரை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், சபாநாயகர் தனபால் 19 எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அளித்த விளக்கத்தை இடைக்கால பதிலாகவே கருதப்படும் என்றும் கூறியுள்ளார்.