
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தாற்காலிகத் துணை வேந்தராகவும், தமிழ்த் துறையின் முன்னாள் புல முதன்மையராகவும் பதவி வகித்த பேராசிரியர் அ.அறிவுநம்பி (64) ஞாயிற்றுக்கிழமை (ஏப். 9) மாரடைப்பால் ஜிப்மர் மருத்துவமனையில் காலமானார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 1976-ஆம் ஆண்டு முதுகலை தமிழ்ப் பட்டத்தையும், 1980-ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தையும் பெற்ற இவர், தமிழ் இதிகாசம், நாடகம், பழங்காலக் கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு மாநில அளவிலான சிறந்த படைப்புக்காக குன்றக்குடி அடிகளார் விருது, புதுவை பல்கலைக்கழகத்தின் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர்.
சர்வதேச அளவில் பக்தி இலக்கியம், கலைக் கோளாக்கம், பெரியபுராணம், தொல்காப்பியரின் இறைக் கொள்கை, செம்மொழி, பாரதி, திருக்குறள் உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளையும், தேசிய அளவில் 42-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் அளித்துள்ளார்.
மேலும், பல்வேறு தமிழ் இலக்கிய மாநாடுகள், கருத்தரங்குகளிலும் பங்கேற்று சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
புதுவை திருக்குறள் மன்றச் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். தினமணி நாளிதழில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பேராசிரியர் அறிவுநம்பியின் சொந்த ஊர் காரைக்குடி. புதுவை லாஸ்பேட்டை கலைவாணி நகரில் வசித்து வந்தார்.
அவருக்கு மனைவி சித்ரா அறிவுநம்பியும், மகன் அமிர்த சரவணனும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை (ஏப். 10) மாலை 4 மணிக்கு கருவடிக்குப்பம் மின் மயானத்தில் நடைபெறும். தொடர்புக்கு: 94431 17769.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.