சென்னை: அதிமுக துணைப் பொதுச் செயலர் பதவிக்கு டிடிவி தினகரன் நியமனத்தை ஏற்க மட்டோம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.
தமிழக செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசியில் பேட்டி அளித்த தீபக், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்தார்.
தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த சலசலப்பு கடந்த ஒரு சில நாட்களாக அடங்கியிருந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சசிகலா அணியில் இருந்து வந்த நிலையில், அதிமுக துணைப் பொதுச் செயலராக டிடிவி தினகரனின் தலைமையை ஏற்க முடியாது என்றும், பன்னீர்செல்வமே கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
சசிகலா ஜெயலலிதாவுடன் இருந்தவர். அவர் என் அம்மா போன்றவர். அவரது தலைமையை ஏற்போம். ஆனால், அவருடைய குடும்பத்தினர் கட்சியின் தலைமையை ஏற்பதை என்னால் மட்டும் அல்ல, கட்சியின் அடிப்படைத் தொண்டர்களால் கூட ஏற்றுக் கொள்ள முடியாது, சசிகலாவின் குடும்பத்தினர் யாரும் கட்சிப் பொறுப்புகளை ஏற்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
நான் இப்போது சசிகலாவுக்குத்தான் ஆதரவு. வாழ்நாள் முழுவதும் இங்கேயே தான் இருப்பேன். எங்கேயும் போக மாட்டேன் என்றும் தீபக் கூறியுள்ளார்.
அதே சமயம், பன்னீர்செல்வம் அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும். அவரோ அல்லது எடப்பாடி பழனிசாமியோ கூடகட்சியின் தலைமையை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.