காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தியது.
அப்போது அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் திடீரென உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வன்முறையில் ஈடுபட்ட கட்சியினர் உட்பட தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.