சென்னை: தவறு செய்தவர்களுக்கு சப்போர்ட் செய்தவர்களைப் பார்க்கும்போது பயங்கர கோபம் வருகிறது என்று சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
சினிமா சண்டைக் கலைஞர்கள் சங்கத்தின் 51-வது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரமன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் காஷ்மீர் சிறுமி வன்புணர்வு மற்றும் கொலை சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
அதை நினைக்கும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இதுபோல தவறு செய்தவர்களுக்கு சப்போர்ட் செய்தவர்களைப் பார்க்கும் போது பயங்கர கோபம் வருகிறது. பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்பது போல், பெண் குழந்தைகளை மதிக்கவும் இவர்களுக்கு தனியாகக் கற்றுக் கொடுக்கணும் போல் இருக்கிறது.
நம்முடைய வேலைவாய்ப்போ, தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் எதையும் அவர்கள் தீர்க்க மாட்டார்கள். ஆனால் நாம் எந்த சாதி, எந்த மதம், எதைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பாடம் எடுப்பார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் என்ன தண்டனை கொடுத்தாலும் பத்தாது.
இவ்வாறு அவர் பேசினார்.