

புது தில்லி: பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, 7 பேரை விடுவிக்க மறுத்த குடியரசுத் தலைவரின் உத்தரவு நகல் 7 பேர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, 7 பேரை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியது.
இந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. 7 பேரை விடுவிப்பதில் தங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்ட பிறகும், இந்த விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.