இன்று சர்வதேச யானைகள் தினம்: யானைகளைப் பாதுகாக்க அறிவியல்பூர்வமான திட்டம் தேவை

உலகின் தொன்மையான விலங்குகளில் யானையும் ஒன்றாகும். மனித வரலாற்றில் காலங்காலமான தொடர்பு யானைக்கு உண்டு. இதன் காரணமாகவே யானை ஒரு பாரம்பரிய உயிரினம் என உச்ச நீதிமன்றம்
இன்று சர்வதேச யானைகள் தினம்: யானைகளைப் பாதுகாக்க அறிவியல்பூர்வமான திட்டம் தேவை
Updated on
2 min read

உலகின் தொன்மையான விலங்குகளில் யானையும் ஒன்றாகும். மனித வரலாற்றில் காலங்காலமான தொடர்பு யானைக்கு உண்டு. இதன் காரணமாகவே யானை ஒரு பாரம்பரிய உயிரினம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதை இந்திய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. 
காலம் காலமாக யானைகள் பயன்படுத்தும் வழித்தடத்தை மனிதன் ஆக்கிரமித்ததால் அதன் எல்லை சுருங்கியது. இதனால் மனிதன், யானை இடையே மோதல் உருவாகியுள்ளது. இந்நிலையில் யானைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதன் காரணத்தால் யானைகளையும், புலிகளையும் பாதுகாக்க மத்திய அரசு சிறப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் சுமார் 1 லட்சம் யானைகள் இருக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ள சூழலில் தற்போது 30,000 யானைகள் மட்டுமே உள்ளன. 
ஆசிய யானைகள் இனம் உலகில் 13 நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்த 13 நாடுகளிலும் உள்ள யானைகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட யானைகள் இந்தியாவில்தான் உள்ளன. அவற்றிலும் பாதியளவுக்கும் மேற்பட்டவை தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளத்தில் உள்ளன. இதிலும் நீலகிரியை உள்ளடக்கிய நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தில்தான் அதிக அளவிலான ஆசிய யானைகள் வாழ்கின்றன.
இத்தனை சிறப்புகளைக் கொண்ட ஆசிய யானைகளின் தற்போதைய நிலை குறித்து யானை ஆர்வலரும், ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவருமான காளிதாசன் கூறியதாவது:
தென்இந்தியாவில், தமிழகத்தில் கோவை, சத்தியமங்கலம் மற்றும் நீலகிரி பகுதிகளிலும், கேரளத்தில் மன்னார்காடு, வயநாடு மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு பகுதிகளிலும், கர்நாடகத்தில் பந்திப்பூர், நாகர்ஹோலே, கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளிலும் யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன. தொடர்ச்சியாக ஒரே காட்டில் அதிக எண்ணிக்கையில் யானைகள் வசிப்பதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. யானைகள் தனித்து வாழும் விலங்கல்ல. கூட்டமாக வாழும் பெரிய விலங்காகும். அதனால் அவை உணவு மற்றும் தண்ணீருக்காக மட்டுமின்றி இனப்பெருக்கத்திற்காகவும் வலசை (இடம் மாறுவது) செல்கின்றன. பருவ நிலைக்கேற்ப யானைகள் வலசை போவது இயல்பாகும். 
ஆனால், யானைகளின் பாரம்பரிய வலசை நிலங்கள் தற்போது தனியார் நிலங்களாகவும், குறுகிய பாதைகளாகவும் மாற்றப்பட்டிருப்பதை யானைகளின் பாரம்பரிய உணர்வால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதனால் குறுகிய எல்லைக்குள் தங்க விருப்பமற்ற யானைகள் தடையை உடைத்து வெளியே வரும்போதுதான் மோதல்களும் அதிகரிக்கின்றன. மனிதர்கûளைக் கண்டு ஒதுங்கிச் சென்ற யானைகள் தற்போது மோதலுக்கு தயாராகின்றன.
எனவே, யானைகளின் வாழ்விடம், வலசைப் பகுதிகள், குறுகிவிட்ட வலசைப் பகுதிகள் என இம்மூன்றையும் இணைத்து ஒரு புதிய செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இந்த செயல் திட்டத்தில் தக்காண பீடபூமியிலிருந்து சமவெளிப் பகுதி வரையிலான யானை வழித்தட நிலங்கள் தொடர்பாக உறுதியான முடிவெடுக்க வேண்டும். வன உயிரின வாழ்விடங்களில் சுற்றுலாவை அனுமதித்தாலும், கேளிக்கை விடுதிகளைஅனுமதிக்கக் கூடாது. 
ஒரு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 30,000 யானைகளில் 1,500 ஆண் யானைகள் மட்டும் உள்ளன. அதேபோல, வனப் பகுதிகளுக்குள் அமைக்கப்படும் சாலைகளை உயர்மட்ட சாலைகளாகவே அமைக்க வேண்டும். யானைகளைப் பாதுகாக்க அறிவியல்பூர்வமான யானை மேலாண்மைத் திட்டத்தை அமலாக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் உலகநாதன் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதில் இருந்தே யானைகளின் முக்கியத்துவம் புலனாகிறது. இதன் காரணமாகவே யானை வழித்தடங்களைப் பாதுகாக்கும் வகையில் 2 நாள்களுக்கு முன் உத்தரவிட்டுள்ளது. யானைகளுக்கு நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கஜ மஹோத்சவா என்ற தலைப்பில் இந்திய கானுயிர் அறக்கட்டளை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து 4 நாள் தேசிய கருத்தரங்கை தில்லியில் நடத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் இக்கருத்தரங்கில் யானை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழலியலாளர்கள் பங்கேற்கின்றனர். இதில், யானைகளைப் பாதுகாப்பது குறித்து கொள்கை அளவிலான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com