தொடர்மழையால் கொடியிலேயே அழுகிய திராட்சை பழங்கள்

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடர் மழையால் விதையில்லா திராட்சை பழங்கள கொடியிலேயே அழுகி வருகின்றன.
ஓடைப்பட்டி பகுதியில் தொடர் மழையால் கொடியிலேயே அழுகிய திராட்சை பழங்கள்.
ஓடைப்பட்டி பகுதியில் தொடர் மழையால் கொடியிலேயே அழுகிய திராட்சை பழங்கள்.
Updated on
2 min read


தேனி:  தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடர் மழையால் விதையில்லா திராட்சை பழங்கள கொடியிலேயே அழுகி வருகின்றன. இதனால், திராட்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விதையுடன் கூடிய பாரம்பரிய கருப்பு பன்னீர் திராட்சை மற்றும் ஒட்டுரக விதையில்லா பச்சை திராட்சை சாகுபடி நடைபெறுகிறது. இதில், ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், தென்பழஞ்சி, பூசாரிகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாணிக்சந்த்,  தாம்சன், சோனாகா, சூப்பர் சோனாகா, கிருஷ்ணா சரத் ஆகிய விதையில்லா திராட்சை ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
ஏற்றுமதி தரத்திலான திராட்சை உற்பத்திக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆனைமலையன்பட்டி தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலையம் சார்பில், ஒட்டுக் கட்டப்பட்ட விதையில்லா திராட்சை குச்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், ஓடைப்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள விதையில்லா திராட்சை பழங்கள் அழுகி வருகின்றன. 
 திராட்சை கொடிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள திராட்சை பழங்கள், 70 சதவீதம் வரை மழையால் வெடிப்பு ஏற்பட்டும், அழுகியும் சேதமடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் கொடிகளில் எஞ்சியுள்ள பழங்களை அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் இவற்றின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. கன மழையால் கேரளத்துக்கு கடந்த இரண்டு மாதங்களாக திராட்சைப் பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படவில்லை. மேலும், திருச்சி, சென்னை, பெங்களூரு சந்தையிலும் விதையில்லா திராட்சைக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தற்போது ஓடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சை கிலோ ரூ. 23-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 
கடந்த ஆண்டு இதே சீசனில் விதையில்லா திராட்சை கிலோ ஒன்று ரூ. 80-க்கும் மேல் விற்பனையானது. இந்த ஆண்டு கொடியிலேயே பழங்கள் அழுகி சேதமடைந்துள்ளது, விலை வீழ்ச்சி ஆகியவற்றால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
ஆராய்ச்சி நிலையம் ஆலோசனை வழங்குமா?: சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கருப்பு பன்னீர் திராட்சையில் மழையால் ஓரளவு மட்டுமே அழுகல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கருப்பு பன்னீர் திராட்சை தற்போது கிலோ ரூ. 60-க்கும் மேல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பாரம்பரிய கருப்பு பன்னீர் திராட்சை தொடர் மழைக்கு தாக்குப் பிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில்,  ஒட்டுக் கட்டிய விதையில்லா திராட்சையில் அழுகல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
 மேலும், திராட்சை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பில் நோய் தாக்குதல் மற்றும் பருவ நிலை மாற்றம் பாதிப்பில் இருந்து திராட்சை பயிரை பாதுகாக்க தொழில்நுட்ப ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்  பணப் பயிரான திராட்சையை பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com