

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கற்சிற்பம் கண்டுகொள்ளப்படாமல் சேதமடைந்து கிடக்கிறது.
நகரின் கடைவீதிப் பகுதியில் தாராபுரம் சாலையிலிருந்து செம்மாண்டம்பாளையம் மேட்டுக்குச் செல்லும் வழியில் புதர்கள் மண்டிய இடத்தில் கல்லால் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் நீண்டகாலமாகக் காணப்படுகிறது. இதில் ஒரு பெண் வீரத்தைப் பறைசாற்றும் அங்கம் மற்றும் உடை மிடுக்கோடு ஒரு காட்டு விலங்கை ஆயுதத்தால் தாக்குவதாகச் செதுக்கப்பட்டுள்ளது.
சிற்பம் 3 அடி உயரம், இரண்டரை அடி அகலம் உள்ளது. அரசர்கள் ஆண்ட காலத்தில் செம்மாண்டம்பாளையம் மேட்டுப்பகுதி படைத்தளப் பயிற்சிக் களமாகவும், உயரத்திலிருந்து கண்காணிக்கும் இடமாகவும், போர்க்கருவிகள் சேமித்து வைக்கும் இடமாகவும் இருந்ததாகச் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது காணப்படும் சிற்பம் சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குடன் சண்டையிட்ட ஒரு வீரப்பெண்மணியின் நினைவாக இருக்குமெனத் கருதப்படுகிறது. இது போன்ற சிற்பங்கள் தமிழர்களின் வீர தீரம், கலை ஞானம், பண்பாடுகளை உலகுக்கு உணர்த்தும் வரலாற்றுச் சான்றுகளாகும். எனவே இப்பகுதியில் தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து இதுபோன்ற சான்றுகளைப் பாதுகாக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.